ஞாயிறு, 15 டிசம்பர், 2013

விருப்பக் கவிதைகள்! - 1.

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு

புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க்

நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்

பிராந்தி
வத்திப்பெட்டி/சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.    

             ****
 
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை. - See more at: http://andhimazhai.com/news/view/kavithaiyin-kaal-thadangkal-22.html#sthash.k5d2dzmu.dpuf
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.      _ நகுலன்.

நன்றி: அந்திமழை மற்றும் செல்வராஜ் ஜெகதீசன்.








               

வெள்ளி, 22 நவம்பர், 2013

எனது 50-வது பிறந்த தினம்!

மனைவி புனிதவதியுடன் நான் 
       செப்டம்பர் மாதம் பற்றி நண்பர்களிடம் பேசும்போது நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "செப்டம்பர் மாதம் அறிவாளிகள் பிறந்த மாதம்" என்று கூறுவேன்; உடனே அவர்கள், " அப்படியானால் அந்த முக்கியமானவர்களில் சிலரைச் சொல்ல முடியுமா?" எனக் கேட்கும்போது, நானும் " அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், பிரதமர் மன்மோகன் சிங் " இப்படி பல பெயர்களைச் சொல்லி முடியும் நிலையில் ராஜேந்திரன் எனும் என் பெயரையும் சேர்த்துச் சொல்வேன்; அப்போது அவர்கள் "அது யார் ராஜேந்திரன், ஓஹோ நீயா? உடனே இடத்தை விட்டுக் கிளம்பய்யா" என்பார்கள். இது நகைச்சுவையாகவே செய்வேன்; ஆனால், அந்த முக்கியமானவர்களின் தகுதியில் எள்ளளவும் என்னிடம் இருப்பதாக நான் கனவில்கூட நினைத்ததில்லை.

இளைய மகள் சந்திரலேகாவும் மூத்தவள் உஷா நந்தினியும் 
       எப்போதும்போல் வந்துவிட்டது 21-09-2013. ஆம் என்னுடைய பிறந்த நாளே தான்! இதன் சிறப்பு என்னவென்றால் இது எனது ஐம்பதாவது பிறந்த நாளாகும். வழக்கமாக எனது பள்ளி இறுதிச் சான்றிதழில் உள்ளபடி 22-தேதி தான் எனது பிறந்த தினம் என்று நினைத்து 1979-ல் பள்ளியை விட்டு நீங்கியதிலிருந்து கொண்டாடிவந்தேன்; அன்றிருந்த நிலையில் கூலிவேலை செய்துவந்த எனது பெற்றோர்கள் பிள்ளைகளின் பிறந்த நாட்களை பொருட்படுத்தியது இல்லை; நானும் அவர்களுக்கு நினைவுபடுத்தியது இல்லை; அதுசரி கொண்டாட்டம் என்று சொன்னது நீங்கள் எண்ணுவதுபோல் இல்லை; அந்த இள வயதில் அன்றைய நாளில் கோவிலுக்குச் செல்வது, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையுடன்  மது அருந்துவது, உணவருந்துவது போன்றவைதான்; பிறகு அது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையுடன்  மது அருந்துவது, உணவருந்துவது என்று என மாறி, தற்போது எல்லா அரட்டைகளையும் தவிர்த்து நான் மட்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவது தொடர்கிறது.ஆனால், இந்த பிறந்த நாள் அப்படி இல்லை.

         20 -09- 2013 அன்று, என்னை வெறுப்பேற்றுகிற அதே நேரம் என்னை மிகவும் விரும்பும் எனது இளைய மகள் சந்திரலேகா, வீட்டில் உள்ள கணினியில், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தினுள் நுழைந்து, பிறப்புச் சான்றிதழ் பட்டியலுக்குச் சென்று, எனது சரியான பிறந்த தேதி
21-09-2013 தான் என்பதை உறுதி செய்தார். இதன் பிறகு நானும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.
முன்புறம் ;வலமிருந்து இடம் 
எனது மாமியார் அவர்களுடன் எனது மனைவியும் நானும் .
பின்புறம்; எனது மகளுடன்  மருமகன் அருண் மரியநாதன் .

       மறுநாள் காலை எனது வீட்டாரின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து முகநூலைத்  திறந்தேன். பலரும் வாழ்த்தி இருப்பார்கள் என்கிற எண்ணம் எனக்கு; ஆனால், எந்த வாழ்த்தும் வரவில்லை. ஏதோ ஒரு இழப்பாக மனம் நினைத்தது.காரணம் நானேதான். பள்ளிப்பதிவின்படி 22-09-1963 எனும் தேதியைத்தான் முக நூலின் காலக்கோட்டில் முன்பே குறித்திருந்தேன். அதன்படி எனக்கு எந்த வாழ்த்தும் வரவில்லை; அதன்பிறகு  21-ந் தேதி பிறந்த நாள் என்பதை அன்றைய தினம் காலையில்தான் முக நூலில் மாற்றியிருந்தேன்; அது  மற்றவர்களுக்கு சேரவில்லைபோல. சரி அடுத்த பிறந்த நாளில் சரி செய்து கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.

    நம்பிக்கை இருந்தாலும் கோவிலுக்குச் செல்ல தயக்கம் காட்டும் நான், அன்று மனைவியுடன் குமணன்சாவடியில் உள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கும் பாடிக்கு (வீட்டிற்கு) திரும்பும் வழியில், திருவேற்காடு கோவிலுக்கும் சென்று வழிபட்டப்பின், எளிதான வழியில் செல்ல எண்ணி, கோலடி, அயப்பாக்கம் கடந்து பாடிக்கு செல்ல முடிவெடுத்து புறப்பட்டோம்; ஆனால் அயப்பாக்கத்தில் நுழையத் துவங்கியவுடன் திடீரென மழை வெளுத்து வாங்கியது ; இருவரும் முற்றாக மழையில் நனைந்தபடி வந்து கொண்டிருந்த போது சற்றுத்தள்ளி ஒரு வெல்டிங் பட்டறை ஒன்று கண்ணில்பட அதன் தாழ்வாரத்தில் ஒதுங்கினோம். அதன் உரிமையாளராகக் காட்டிக்கொண்டவர் பட்டறையின் உள்ளே அமரச் சொல்லி  வேண்டினார்; அப்போதுதான் தெரிந்தது, அது என்னுடன்  பணி செய்த உமாபதி எனும் வெல்டர். பழக இனியவர்; பின்பு மழை விட்டவுடன் அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்;

     எனது மகள் உஷா, மருமகன் அருண், இளைய மகள் சந்திரலேகா மற்றும் மனைவியுடன் சந்தோஷமாகக் கழிந்தது எனது 50-வது பிறந்தநாள்; இரவு  நண்பர்களுடன் சிறு விருந்து. அனைவருக்கும் நன்றி!

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்!
                                                       உண்ணாவிரதம் என்பது உணவருந்தாமல் இருப்பது; உணவு கிடைக்காமல் இருப்பவன் நிலை பட்டினி; அது விரதத்தில் சேராது.  உணவு கிடைத்தாலும் ஒருவன் ஒரு மாதத்தில் ஒன்றிரண்டு நாட்கள் உண்ணாவிரதமிருப்பது தனது உடலின் செயல்பாட்டை வளப்படுத்தவே! சிலர் விரதமிருப்பது ஒரு பிரச்சினையில் தனது கருத்தை வெளிக்காட்டவும் தன் மீது மற்றவர்களின் கவனத்தைத் திருப்பவும் தான்; ஆனால், ஒரு சிலர், தான் நியாயமாகக் கருதும் ஒரு கருத்தாக்கத்தை அது அனைவரும் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் உறுதியுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிரிழப்பு இல்லாமல் வெற்றியும் பெற்றனர்; தோல்வியும் அடைந்தனர்; மேலும் சிலர் உண்ணாவிரத பாதிப்பால் இறந்தபின் தன் கொள்கைக்கான பரிசினை வென்றெடுத்தனர். இந்த உண்ணாவிரதங்களில் சில நிபந்தனைகளுடன் ஒரு நாள் அடையாள அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் என வரையறைகளுடன் மேற்கொள்ளப்படும்.

இதில் நகைச்சுவையான உண்ணாவிரதங்களும் உண்டு; 1989 ஆண்டு வரிசையில் என்று ஞாபகம். ஒருமுறை ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு நடிகர் ஒரு அடையாள உண்ணாவிரதம் இருந்தார்; பிரபலமான நடிகர் அல்லவா? அந்த நடிகர் எதிர்பார்த்ததைவிட கூட்டம் சற்று அதிகமாக கூடியது. சும்மா இருக்க முடியுமா? ஜனநாயக நாடாயிற்றே! விரதம் இருந்த அந்த நடிகரை எதிர்த்து, ஆளும் கட்சியைச் சார்ந்த மற்ற சில நடிகர்களை வைத்து உண்ணும் விரதம் என்ற புதுவகையான விரதத்தை நடத்தினர். அந்த உண்ணும்விரதத்தை முறியடிக்கும் வகையில் காலை முதல் மதிய உணவு வரை உண்ணாவிரதமிருந்து அண்டை நாட்டின் நடைபெற்ற உள்நாட்டுப் போரையே நிறுத்தித் தமிழர்களைக் காப்பாற்றினர் என்பது அதைவிட வேடிக்கை!

         நல்ல நோக்கத்தோடு துவங்கிய தோழர் தியாகுவின் உண்ணாவிரதமும் இப்படி ஆனதில் தான் நமது வருத்தம்!

 தோழர் தியாகு உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது அவரின் உண்ணாவிரதத்தின் முடிவுக்குப்பின் புலப்பட்டது. அவர் நிச்சயம் விளம்பரப்பிரியர் அல்ல; தனது தேவைக்காக கருணாநிதியையோ, கருணாநிதி அடிபணிந்திருக்கும்  மத்திய அரசையோ ஆதரிப்பவரும் அல்ல; பட்டினிப்போர் என்பதை இக்கால அரசுகள் கண்டுகொள்வதுமில்லை; இந்த பட்டினிப்போராட்டத்தால் அவரை இழக்கவும் யாரும் விரும்ப மாட்டார்கள்.

      தியாகு அவர்கள் ஈழத் தமிழருக்காக, இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நடக்க இருப்பதைத் தடுத்து நிறுத்த உண்ணாவிரதம் இருந்தவர், அதை முடித்துக் கொண்டவிதம் கேலிக்கூத்தானது! இலங்கையிலே தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டு வந்த நிலையில் " அங்கே தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என தனது தூதரக, மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளைக்கொண்டு ( இலங்கை அரசுக்கு இந்தியாவின் சார்பில் ஆயுதங்களையும் வழங்கிக்கொண்டே ) உண்மையை மறைத்த மத்திய அரசு, இப்போது தோழர் தியாகுவுக்கு உறுதி கொடுத்துவிட்டார்களாம் அவரது கோரிக்கை நிறைவேறும் என்று; நம்புவோம்; நம்பித்தொலைப்போம்!

       தோழர் தியாகு தனது போராட்ட முடிவிற்கு மேற்சொன்ன காரணத்துடன் அடுத்துச் சொன்னது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் நகைச்சுவையாகும்! " மத்திய அரசைச் சேர்ந்தவர்கள் பொய் சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!" என அந்த அரசில் அங்கம் வகித்துக்கொண்டே தங்களது சில மணிநேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தியவர்கள் மற்றும் அதன் தலைவர்களும் உறுதி கொடுத்தார்களாம் காமன்வெல்த் நிகழ்ச்சி சம்பந்தமாக நல்ல முடிவு மத்திய அரசு எடுக்குமென்று!

இந்த மட்டமான காரணங்களைக் காட்டுவதைவிட தியாகு அவர்கள்,  சுப.வீ,  திருமா,  மனு.புத்திரன் அவர்களைப்போல கலைஞரின் ஊதுகுழலாக அவரது மேடையில் வலம் வருவது நல்லது; இதற்குத் தனியொரு நாடகம் தேவையில்லை; அது இந்த காலகட்டத்தில் எடுபடாது. வரவர உண்ணாவிரதங்களின் முடிவுகள் இப்படி இருப்பதால்தான் அரசுகளும் கண்டுகொள்வதில்லை; மக்களும் சட்டை செய்வதில்லை.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

படித்ததில் பிடித்தது...

          பாகிஸ்தான்: அடையாளம் தேடும் நாடு.

     எழுதியவர்: முபாரக் அலி. பாகிஸ்தானின் வரலாற்று பேராசிரியர்!

                           தமிழில்: மொழிபெயர்ப்பு: நா.தருமராஜன்.

                                                 வெளியீடு: என்.சி.பி.எச்.

     வரலாறுகள் சிதைக்கப்படாமல் ஆணித்தரமாக எழுதப்பட்டால்தான் பின்னோக்கிப் பார்த்து முன்னோக்கிச் செல்லும் புதிய சமுதாயம் உருவாகும் என்பது இந்நூலின் அடிப்படைக்கருத்து  ---  இது பதிப்புரை.

    முனைவர் முபாரக் அலி தொழில்முறை வரலாற்றாசிரியர்களிடமிருந்து தனித்து, மசூதிகள், மற்றும் அரசவைகளில் மையம் கொண்டிருந்த பாகிஸ்தானின் வரலாற்றை சாதாரண மக்களை நோக்கித் திருப்பினார். தெளிவான நடையில் வரலாற்று நூல்களை எழுதினார் -- மாணவர்களும் அரசியல்வாதிகளும் விரும்பும் வண்ணம்! அதிகாரபூர்வ வரலாறுகளில் உள்ள தவறுகளையும் பிரச்சாரத்தையும் வன்மையாக விமர்சனம் செய்திருக்கிறார். அரசு என்ற கவசத்தை அணிந்துகொண்டால் வரலாறு தன்னுடைய படைப்புத் திறனை இழந்துவிடுகிறது என்றும் மக்களுடைய சிந்தனா சக்தியை தூண்டுவதற்குப் பதிலாக அதை உறைய வைக்கிறது என்றும் சொல்கிறார்.
                                        --- இது:  முனைவர் ஸையது ஜாபர் அஹமது
                                                           கராச்சி பல்கலைக்கழகம், கராச்சி.

    இந்த புத்தகத்தின் வெறும் 140 பக்கங்களில் மிகவும் நேர்த்தியாக,தெளிவான நடையில் தமது நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும் இருக்கின்ற நிலையினை எடுத்துக் கூறுகிறார் முபாரக் அலி. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு வந்த அரசின் தலைவர்களும் அதன்பின் அடுத்தடுத்து வந்த அரசுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் சிறு சரிவுகளுக்குக்கூட  மதத்தையும் மதத் தலைவர்களின் தொடர்புகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, அதிகாரத்தைத் தங்கள் கையிலிருந்து  செல்லவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்நாட்டின் மதம்தான் முக்கியம்; அதனால் மதவழி மீறாமல் அதன்வழியே ஆட்சி நடத்துவது போன்ற பாவனையை ஏற்படுத்தி மதத்தலைவர்களை திருப்தி செய்து, அவர்களை வைத்தே எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற மக்களைக் கட்டுப்படுத்தி அரசியல்வாதிகள் தங்கள் நலனைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்; அதே நேரத்தில் மதவாதிகளும் மதத்தையும் மக்களையும் காட்டிக்காட்டி அரசியல்வாதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்திருக்கிறார்கள்.

                                                             மேற்கண்ட நிலை தொடர்ந்தபோது அரசியல்வாதிகளின் தகுதிகள் குறையத் துவங்கி மதவாதிகளின் கை ஓங்கி மதத்தின் பல வலுப்பெற்ற உட்பிரிவுகள் தாங்களே பல மதவாதக் கட்சிகளைத் துவக்கிக்கொண்டன; மக்களின் மத உணர்ச்சிகளைத் தூண்டி ஆட்சியதிகாரம் பெற மதம் விரும்புகிறது; அரசியலும் மதமும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் ஒன்றுக்கொன்று குழி பறிக்கின்றன.

                   இஸ்லாமிய மத போதனைகளில் எந்த புதிய விளக்கங்களும் புதிய மாற்றங்களும் ஏற்க்கப்படக்கூடாது என்பதில் பாகிஸ்தானிய மதவாதிகள் மிகத் தெளிவாக உள்ளார்கள்; அதிலும் இந்திய இஸ்லாமிய அறிஞர்களின் எந்த புதிய விளக்கங்களும் தவறிக்கூட தங்கள் நாட்டில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

              மேலும், இந்நூலில் பாகிஸ்தானில் ஒவ்வொரு அரசும் எவ்வாறெல்லாம் மதத்தைப் பயன்படுத்தின என்றும்,  ஒவ்வொரு சர்வாதிகாரியும் எப்படி  மதத்தைப் பயன்படுத்தினர் என்றும், அந்நாட்டிற்கான வரலாற்றை அமெரிக்கர்களை வைத்து எழுதியதையும், இந்தியா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை மாற்றி எழுதுவதையும் தமது பாகிஸ்தானின் வரலாற்றைத் தங்களவர்களே  தவறாகத் திரிப்பதையும் எழுதி மனம் புழுங்குகிறார் அதன் ஆசிரியர் முனைவர்.முபாரக் அலி!
   
 மதத்தைக் கைக்கொண்ட எந்த ஒரு நாடும் இப்படித்தான் இருக்கும் என்றும், நமது நாட்டில்கூட ஒரு சில வேற்று மதவெறியர்களின் செயல்களுக்காக மாற்று மதவெறியின் ஆட்சி தேவையா என்று அச்சம் ஏற்படுவது இயல்புதானே!  நன்றி!
  
  இது கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

வெள்ளி, 26 ஜூலை, 2013

முக(மற்ற) நூல்

           துவக்கம்:   முகநூல் - Face  Book - என்ன அழகான பெயர்; அதில் தான் என்ன அருமையான பயன் தெரியுமா?   எனக்கு முதலில் முகநூல் பற்றி அதன் பயன்பாடுகள் பற்றி பெயரளவுக்கே தான் தெரிந்திருந்தது. பின்னர், மறைந்த எனது சகோதரரின் மகன் திலீப்குமார் தான் மடிக்கணினி மூலம் எனக்கு முகநூல் பற்றிய சில விவரங்களைச் சொன்னதோடு, அதனுள் நுழைவதற்கான வழிமுறைகளையும் சொன்னார். அதன்படி நானும் எனக்கென்று ஒரு முகநூல் பதிவொன்றை துவக்கிக்கொண்டேன்-தமிழில்.

          நண்பர்கள்:   மெல்ல மெல்ல முகநூலில் நன்றாக நுழைந்தபின் முதல்முதலாக சசிகுமார் என்பவரை நண்பனாக்கிக் கொண்டேன்; பின்பு பல எழுத்தாளர்களையும் சமூக கருத்தாளர்களையும் நானே கோரிக்கை கொடுத்து நட்பாளர்களாக இணைத்துக் கொண்டேன். இதில் எனது ஆசான் திரு.தமிழருவி மணியன், சிறந்த இதழாளர் செ.ச.செந்தில்நாதன், இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மற்றும் பல சிறந்த பதிவர்களைப் பெற்றுள்ளேன்!

         விருப்பம்,கருத்து, பகிர்தல்:   இவ்வட்டத்தில் நான் முதலில் மற்றவர்களின் பதிவுகள் பிடித்திருந்தால் மட்டுமே விருப்பம்(like) தெரிவிப்பேன்;எல்லாவற்றுக்கும் அல்ல! அப்போது சில பதிவுகள் நாம் ஆதரிக்கும்படியும் அல்லது எதிர்க்கும்படியும் மேலும் நல்ல தூண்டுதல்களைத் தரும்படியும் வந்து இருக்கும்; அதைப்பார்த்து நானும் கருத்துகளைச் சொல்லத் துவங்கினேன்! மற்றவர்களின் கருத்துகளோ,படங்களோ விருப்பத்தின்பேரில் பகிரத்துவங்கினேன்.
                           
                    சரி! இனி சொல்லவந்த செய்திக்கு வருவோம்! ஐயா! நாம் மேடைபேச்சு நாகரீகங்களைத்  தொலைத்து பல வருடங்களாகிவிட்டன! எட்டிக்காய் போல கசக்கிறது - எதிக்கட்சிகளின் நல்ல கருத்துகள்கூட, யாருடைய அரசாக இருந்தாலும்! அடச்சீ! இந்த அரசியல் வேண்டாமடா சாமி என்று இலக்கியத்திற்குப் போனால், அடப்பாவிகளா! அவர்களாவது மேடையில் ஏசிவிட்டுச் சென்றுவிடுவார்கள்! இந்த இலக்கியவாதி எதிரே அமர்ந்திருக்கும் போதே அடுத்தவனின் மனைவியை இழுக்கிறான்! இவர்களது பல கலந்துரையாடல்களும் புத்தக வெளியீடு
 ஆகியவைகளும் நாற்காலிப் பறிமாறல்களுடனும், செருப்பு அர்ச்சனைகளுடனும், புத்தக கிழித்தலுடனும், இவனது தாய் சொல்லித்தான் தனது தகப்பனை இவன் அறிந்தான் என்பது தெரிந்தும் அடுத்தவனின் தாயைத் தவறாகப் பேசுவதுடனும் தான் முடியும்! சரி,தொலைகிறது என்ற எண்ணத்துடன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால் அங்கே இன்னும் மோசம்! விவாதம் எனும் பெயரில்  அரசியல்,இலக்கியம் உட்பட மேலும் பல துறைகளிலிருந்து வந்த வித்தகர்களும் சேர்ந்து ஒரே நேரத்தில், இழவு வீட்டில் வந்தவர்கள் அழுகிறபோது கூர்ந்து கவனித்தால் ஒவ்வொருவரும் இழவுக்கு வந்திருக்கும் வீட்டை மறந்துவிட்டு, தங்கள் வீடுகளில் ஏற்கனவே நடந்த ஒரு முக்கிய மரணத்தை சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருப்பார்களே அதுபோல அவரவர் கருத்தை வலியுறுத்தி மட்டுமே கத்திக் கொண்டிருப்பார்கள். இப்போதெல்லாம் பலர் நடுநிலைப் பத்திரிகையாளர் மற்றும் இலக்கியவாதி என்ற பெயரில், தான் விரும்புகிற கட்சிக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக தொலைக்காட்சிகளில் கதைக்கிறார்கள்; கூலிக்கு வேலை செய்கிறார்கள். என்ன தான் செய்வது?

        இனி நிம்மதியாக முகநூலில் உள்ள பதிவுகளுக்கு விருப்பமோ,கருத்தோ சொல்லிவிட்டு இருப்போம் என்றால், அங்கும் சில சொம்படி சித்தர்கள் தங்கள் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டனர்! இங்கு வரும் பதிவுகளுக்கு ஒன்றும் தெரியாமலே கருத்துச் சொல்ல ஒரு கூட்டம் என்றால், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், நான் சொல்வதை நீ எதிர்த்து எழுதினால் தனது நட்பு வட்டத்திலிருந்தே நீக்கும் ஒரு கூட்டம். பதிவாளன் மாற்றுத்திறனாளி என்றால் அவனது உடற்குறையைச் சுட்டி பழிக்கும் ஒரு கூட்டம் எனில், தனது மாற்றுத்திறனாளி என்கிற தகுதியைக்கொண்டே தன் தவறுகளுக்கு பாதுகாப்புத் தேடும் ஒரு கூட்டம். தான் சொல்லும் கருத்து எங்கே தவறாகிவிடுமோ என்ற அச்சத்தினாலோ,அல்லது யாரையாவது திட்டுவதற்காகவோ மறைபெயர் வைத்துப் பதிவிடும் ஒரு கூட்டம். காதலுக்காக ஒரு கூட்டம்; இழந்த காதலுக்காக ஒரு கூட்டம். ஆண்களை ஈர்க்க ஒரு பெண்கள் கூட்டம்; பெண்கள் பெயரில் ஆண்கள் பதிவிடும்போது வழியுமே ஒரு கூட்டம்.

       சமர்ப்பணம்:   இலக்கியச் சிற்றிதழ் நடுநிலை எழுத்து என்றெல்லாம் சொல்லி பத்திரிகை நடத்திவந்து அதில் பல நல்ல எழுத்தாளர்களை வாசகர்கள் அறியும்வண்ணம் செய்துவிட்டு, தானும் சில நல்ல கட்டுரைகளையும் கவிதைகளையும் வழங்கிவிட்டு, இன்று தனக்கு ஏற்பட்ட பணச்சரிவோ இல்லை மனச்சரிவோ, எதன்பொருட்டோ மனம் மாறி, சக எழுத்தாளர்களில் சிலரைத் தனக்கு வேண்டப்பட்ட கட்சிக்கு ஆதரவாக எழுதவைப்பது, சக எழுத்தாளர்களை ஒருவருடன் ஒருவர் மோதலில் வைத்திருப்பது, எந்தக் கருத்துகளை முன் வைத்து எழுதுகிறோமோ,அதற்கு முரணாக குறிப்பிட்ட கட்சிக்கு மக்கள் தொடர்பு வேலை செய்வது,விளம்பரக் கவிதை வாசிப்பது, தன் கருத்தை எதிர்த்தால் முகநூல் பக்கத்திலிருந்து நீக்குவது, மதச்சார்பு அற்றவர்போல் நடிப்பது, தன்னைப் பின் தொடர்ந்த வாசகர்களை நட்டாற்றில் விட்டது என்பது போன்ற பல முகங்களைக் கொண்ட உயிர்மை: மனுஷ்யபுத்திரனுக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம்!                            

செவ்வாய், 23 ஜூலை, 2013

படித்ததில் ஒன்று

முற்றாத இரவொன்றில்
திரு. மா.காமுத்துரை அவர்களின் முற்றாத இரவொன்றில் நாவலை 5.9.2012 அன்று வாசித்தேன்.இது ஒரு காதல் கதைதான்; அதுவும் ஒன்றிணைந்து வாழ வழிவிடாத பெற்றோர்களை விட்டு ஓடிப்போகும் காதலர்களின் கதைதான்.காதலர்கள் காதலிக்க செய்யும் முயற்சிகளையோ, அவர்களின் சாகசங்களையோ, ரசமான காதல் வர்ணனை களையோ காட்டும் கதை அல்ல. 

கதைநாயகர்கள் மாயனும் வசந்தியும் உயிருக்கு உயிரான காதலர்கள். தங்கள் வீடுகளில் மணம் செய்ய ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதால் ஊரைவிட்டு ஓடி,பதினைந்து நாட்களாக தெரிந்தவர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் ஒளிந்துகொள்கிறார்கள்; அந்த 15-வது மாலையில் பெண் வீட்டார் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நண்பனின் வீட்டில் மாயனும் வசந்தியும் இருப்பதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பெண்ணின் தந்தை தனது ஊரின் நாட்டாமை மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு மாயன் வசந்தி இருக்கும் ஊருக்குச் சென்று அந்த வீட்டாரிடம் நயமாக பேசி இருவரையும் அனுப்பிவைக்கும்படி கேட்க, வசந்தி மாயன் அவனது நண்பனும் உடன்செல்ல மறுக்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கருதி அந்த ஊரைவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பி,அன்று இரவே அந்த இளவட்டங்களை பிரித்துக் கொண்டுவர ஏற்பாடுகளை செய்கிறார்கள்; அதே நாளிரவில் தோழன் சோனைமுத்து வீட்டிலும் காதலர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.இப்படி மாலை முதல் இரவு விடியும் வரை இரு தரப்பிலும் நடக்கும் சம்பவங்களை மிகவும் யதார்த்தமாக சுவையுடனும் இயல்பாகவும் எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.

என்னதான் ஒரே சாதியாக இருப்பினும் இந்த காதலர்கள் விஷயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்கபேதம் தலையிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சிவப்புத் தோழர் தன் வழியிலும் மாயனின் தந்தை ஒரு வழியிலும் நாட்டாமை ஒரு வழியிலும் அவரை அழுத்த நினைக்கும் மைனரும் அவனது கையாள் ராசப்பனும் மற்றொரு வழியிலும் செயல்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் தாய் தனக்கு ஆதரவாக செயல்பட இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்னும் முடிவுடன் நிலை தடுமாறி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகிறாள்.அந்த முற்றாத இரவின் முடிவுகளை தனது மெல்லிய ஒளியினைப் பாய்ச்சி, தானே சாட்சியாகி நிற்கிறது வட்ட நிலா!

இது விமர்சனம் அல்ல. மற்றவர்களுடன் பகிர்வு மட்டுமே! ஒரு சிறு குமிழிதான்! 

நன்றி!

முதல் வணக்கம்!

முதல் வணக்கம்!

  சாதாரண குடும்பத்தில் பிறந்து, நல்ல கல்வி கற்று அதன் மூலமாக அரசுசார் பள்ளியில் சிறந்த ஆசிரியராகப் பணியாற்றி,காமராஜரைத் தலைவனாக ஏற்று, தமிழ் இலக்கியப் பேச்சிலும் இணையற்ற எழுத்திலும் கலந்து, கையூட்டு பெற்றவன் என்று பிறர் கைகாட்ட முடியாதபடி வாழ்ந்துவரும் திரு.தமிழருவி மணியன் அவர்களின் கடைசி வரிசை மாணவனாக இருந்து, அவரை ஆசானாக வணங்கி இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன்!