ஞாயிறு, 24 ஜனவரி, 2021

 


அவளும் நானும் அலையும் கடலும்…
கார்த்திக் புகழேந்தி

சென்ற மாதம் வேளச்சேரியில் யாவரும் பதிப்பகத்தின் (ஜீவ கரிகாலன்) பி4புக்ஸ் புத்தகக் கடையின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தேன் ஒரு வாசகனாக. தாமதமாக நான் சென்றதால், திறப்பு விழா முடிந்துவிட, தலைமை விருந்தினர் தமிழச்சி தங்க பாண்டியன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மூத்த மற்றும் இளைய (வயதில்) எழுத்தாளர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எனக்கு சில எழுத்தாளர்களை மட்டுமே தெரியும்; ‘நட்சத்திர வாசிகள்’ கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது நண்பர் கார்த்திக் புகழேந்தி மூலம். எப்போதுமே எனது பணிநிமித்தம் இல்லாமல் ஒரு வாசகனாக எந்த புத்தகக் கடையில் நுழைந்தாலும் நான் ஒரு புத்தகத்தை வாங்கிவிடுவேன். நான் ஒரு நாவல் விரும்பி.
அப்படித்தான் அன்று பி4புக்ஸ்-ன் உள்ளே நுழைந்ததும் நட்புடன் ஜீவா அவர்கள் வரவேற்றார். நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த – காட்சிப் படுத்தப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, செல்வதற்கு மனமில்லாமல், இருக்கும் காசுக்குத் தகுந்தபடி ஏதேனும் ஒரு சிறு புத்தகம் வாங்க நினைத்தேன். அதே சமயம் அறிமுகமாகியும் நாம் வாசிக்காத எழுத்தாளரின் புத்தகத்தை வாங்குவது என்று முடிவு செய்தேன். சிறிது நேரம் ஜீவா பதிப்பகத்தின் கார்த்திக் புகழேந்தியுடன் உரையாடிவிட்டு, அவரது புத்தகத்தையே தேர்ந்தெடுத்து, அவரது கையெழுத்தினையும் பெற்று மகிழ்ந்தேன். அந்தச் சிறுகதைப் புத்தகம்தான் அவளும் நானும் அலையும் கடலும்… யாவரும் பதிப்பகத்தின் சிறுகதைத் தொகுப்பு. விலை – 130/- இது மூன்றாம் பதிப்பு. விரைவில் நான்காம் பதிப்பு வெளியிடுவார்கள் என்பது உண்மை.
நண்பர் கார்த்திக் புகழேந்தியின் இந்த ‘அவளும் நானும் அலையும் கடலும்…’ பாசாங்குகள் அற்ற சிறுகதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையானது துவங்கும்போதும், கடிவாளத்தில் பூட்டப்பட்ட குதிரை எப்படித் தன் வண்டியை மெதுவாக இழுத்துப் புறப்படுவது போல புறப்பட்டு, பின்பு சீரான வேகத்தில், ஆரவாரங்களற்றுச் சென்று சேரவேண்டிய இடத்திற்கு செல்கிறதோ, அப்படித்தான் முடியும்போதும்.
வட்டார வழக்கு எழுத்து என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இவைகள் நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைகள் என்பது கூடுதல் சிறப்பு. இத்தொகுப்பில் பல இடங்களில் வரும் வட்டாரப் பழமொழிகள் மிகுந்த ரசிப்பைத் தருகின்றன. மரியாதைக்குரிய ஜோ டி குரூஸ் அவர்கள் சொன்னதுபோல, நிறைய – புழக்கத்தில் விடுபட்டுப்போன தமிழ் வார்த்தைகளை அனாயசமாகக் கையாண்டு, ஆச்சரியப்படுத்துகிறார். நெய்தல் நில வாழ்வை தன்னாலும் சிறப்பாக விவரிக்க இயலும் என்பதைக் காட்டும் சிறுகதை ‘வள்ளம்’. பரஸ்பர நம்பிக்கைகளே அன்றைய வாழ்வை வழி நடத்தின என்பதை விவரிக்கும் களம் ‘வள்ளம்’.
‘அவளும் நானும் அலையும் கடலும்…’
“ஒரு விருப்பம் அதைச் சொல்லியாகிவிட்டது. அது நிராகரிக்கப் படலாம் அல்லது எந்த மூணுசாமி புண்ணியத்திலாவது ஏற்றுக் கொள்ளவும் படலாம். இரண்டில் ஏதாவது ஒன்றுதானே வழி! எனக்கு முதலாவது நேர்ந்திருக்கிறது. அதற்காகக் கலங்கிப்போய் அந்த இடத்திலே சரிந்து விழுந்துவிடவா வாழ்க்கையில் இவ்வளவு போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.”
‘குதிரைக் குட்டி’ இளவயதுக் காதலின் அருகே நம்மை அழைத்துச் செல்லும்.
எப்பேர்ப்பட்ட இளைஞனையும் வளைத்துப்போடும் தன்மை சாதீயத்திற்கு உண்டு; அதனால்தான் இளைஞர்களைக் கொண்டே தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் சாதீயத் தலைவர்கள்; அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதை ‘கொலைச்சொல்’.
‘காதலின் தீபமொன்று’ இதில் வரும் மூத்த கிரிக்கெட் அண்ணாச்சி முருகன்கள் நிறையப் பேர்கள் உண்டு; உள்ளூர் கிரிக்கெட்டை ஆதரித்த அண்ணாச்சிகளில் நானும் ஒருவன்; அவர்கள் இல்லையென்றால், உள்ளூர் அணிகள்(சென்னைக்கு வெளியே இருப்பவை), பந்து வாங்கக்கூடக் காசில்லாமல் திரியும் நிலை. அன்று ரசிகர் மன்றங்களும் இப்படித்தான். அவர்களோடு இணைத்தும் ஒரு காதல் அனுபவத்தைக் காட்டுகிறார் நூலாசிரியர் கார்த்திக் புகழேந்தி. அருமையான யதார்த்தமான இக்கதைகளை வாசகனாகவே ரசித்தேன்; இன்னும் எழுத நிறைய உண்டு; ஆனால், நான் விமர்சகன் இல்லை. அதனால் முரண்கள் ஏதும் இப்புத்தகத்தில் இருப்பதாக நான் அறியவுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக